ரேஷன் அரிசி கடத்தல்; 1,100 கிலோ பறிமுதல்

கோவை; ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்த நிலையில், 1,100 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், செல்வபுரம் பகுதியில், நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்தது.

சந்தேகத்தின் பேரில், காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் காரில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. காரை ஓட்டி வந்தவரைப் பிடித்து, போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழாவை சேர்ந்த சதாம், 35 எனத் தெரிந்தது. ரேஷன் அரிசியை கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்வதும் தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 1,100 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை, பறிமுதல் செய்தனர்.

Advertisement