குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் ஏலத்திற்கு லாரியில் அனுப்பி வைப்பு

திருத்தணி:திருத்தணி தாசில்தார் அலுவலக வளாகத்தில், திருத்தணி காவல் நிலைய எல்லைக்குள் திருட்டு, விபத்து மற்றும் கடத்தல் போன்ற வழக்குகளில் சிக்கிய இருசக்கர வாகனங்களை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த வாகனங்கள் ஏலம் விடாமல் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், மண்ணில் புதைந்தும் வீணாகி வந்தன. இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு, தாசில்தார் அனுமதியுடன் நேற்று போலீசார், லாரியில் இருசக்கர வாகனங்களை ஏற்றிச் சென்றனர்.

இதுகுறித்து எஸ்.பி., அலுவலக ஊழியர் கூறியாவது:

கடந்த 2022ம் ஆண்டு விபத்து, கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட இருசக்கர வாகனங்கள் விரைவில் ஏலம் விடப்படவுள்ளன.

முதற்கட்டமாக நேற்று, ஒரு லாரியில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொண்டு செல்கிறோம். மீதமுள்ள வாகனங்கள் படிப்படியாக லாரியின் மூலம் ஏற்றிச் சென்று, பின் வாகனங்களை தரம் பிரித்து திட்ட மதிப்பீடு தயாரித்து, கலெக்டரின் அனுமதி பெற்று பொது ஏலம் விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement