பயன்பாட்டுக்கு வராத 'மொபைல் டாய்லெட்'

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் நமக்கு நாமே திட்டத்தில் அமைத்த 'மொபைல் டாய்லெட்' மூன்று ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராததால், ரூ.80 ஆயிரம் பணம் வழங்கியவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்டில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. மதுரை வரும் பஸ்கள் நிறுத்தும் பகுதியில் பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க, கண்மாய் கரைக்கு சென்றனர்.

இவர்களுக்கு உதவவும், கண்மாய் கரையை பராமரிக்கவும் ரோட்டரி சங்கத்தினர் மொபைல் டாய்லெட் அமைக்க யோசனை தெரிவித்தனர்.

இதையடுத்து நகராட்சி நிர்வாகம் நமக்கு நாமே திட்டத்தில் அமைக்க ஏற்பாடு செய்தது.

மெபைல் டாய்லெட் அமைக்க தேவையான ரூ.2.40 லட்சத்திற்கு ரோட்டரி சங்கத்தினர் ரூ. 80 ஆயிரம் செலுத்தினர்.

பொதுமக்கள் ரோட்டில் இருந்து டாய்லெட் உள்ளே செல்லும் வகையில் கட்டினர். இதற்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதால் டாய்லெட் பயன்பாட்டுக்கு வரவில்லை.

சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பரீட்சார்த்த முறையில் டாய்லெட் அமைக்க முயற்சி மேற்கொண்டு பணம் செலுத்தினோம். நாங்கள் கொடுத்த வரைபடத்தை மாற்றி வேறுமாதிரி அமைத்தனர். இதனால் யாரும் பயன்படுத்த முடியாமல் டாய்லெட் காட்சிப் பொருளாக மாறிவிட்டது.

இது முறையாக பயன்பாட்டுக்கு வந்திருந்தால் மேலும் சில மொபைல் டாய்லெட்கள் அமைத்திருக்கலாம் என்றனர்.

Advertisement