'கிடை'களில் கண்காணிப்பு கேமரா அமைக்க யோசனை

உசிலம்பட்டி: 'ஆடு, மாடுகளைக் கொண்டு கிடைகள் அமைக்கும்போது திருட்டு நடக்காமல் தவிர்க்க இணைய வசதியுடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தலாம்' என போலீசார் யோசனை தெரிவித்தனர்.

உசிலம்பட்டியில் போலீசார், தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., சந்திரசேகரன், எழுமலை இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, டி.ராமநாதபுரம் எஸ்.ஐ., அருள்பாண்டி, கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சரவணன், பாலமுருகன், பால்பாண்டி, செல்லப்பாண்டி, ஜெயக்கருங்கண், கூரிராஜ் பங்கேற்றனர். டி.ராமநாதபுரம் பகுதியில் சமீபத்தில் ஆடுகள் திருடியவர்களை சில தினங்களில் கண்டறிந்து கைது செய்ததுடன், ஆடுகளை மீட்டதற்கும் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

டி.எஸ்.பி., சந்திரசேகரன் கூறியதாவது: கால்நடைகள் கிடை அமைக்க ஊர், ஊராகச் செல்லும் போது திருட்டு நடக்காமல் இருக்க பட்டியில் இணையவசதியுடன் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தலாம். போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பதும் அவசியம். கிடை அமைக்கும் கிராமங்களில் போதைப் பொருள் விற்பனை செய்வோர் குறித்து அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்கலாம் என்றார்.

Advertisement