பொம்மையார்பாளையம் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிப்பு; வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு

விழுப்புரம் : பொம்மையார்பாளையம் செண்மண் பள்ளத்தாக்கை, பாதுகாக்கப்பட்ட இடமாக அரசு அறிவித்துள்ளது, வரலாற்று ஆய்வாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சட்டசபையில் நடந்த நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ' விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, பொம்மையார்பாளையத்தில் தனித்துவமான புவியியல் பள்ளத்தாக்கு பகுதி, 5 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்படும்' என அறிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பை, தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து, விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டு பேரவை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கூறியதாவது:

பொம்மையார்பாளையம் பகுதியில் இயற்கையாகவே செம்மண் பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. ஓடையான அந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த 2001ம் ஆண்டில் கேரள பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர், இப்பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டனர். அப்போது கல்லாக மாறியிருந்த குழந்தையின் மண்டை ஓடு கண்டறியப்பட்டது. அது குறித்து, கேரள ஆய்வகங்களில் அறிவியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த மண்டை ஓட்டின் வயது 2 லட்சம் ஆண்டுகள் என தெரியவந்தது. இந்த வகையில், மனிதகுல வரலாறு மற்றும் வளர்ச்சியில், பொம்மையார்பாளையம் பள்ளத்தாக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. இதனால், வரலாறு, அறிவியல், சுற்றுலா, கனிம வளம் உள்ளிட்டவற்றால் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக தொடர்கிறது.

தற்போது, தனித்துவமான புவியியல் அமைப்பாக அறிவித்துள்ள அரசு, 5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தி, அதனை பாதுகாக்க வலியுறுத்தியிருப்பது வரவேற்புக்குரியதாகும். இதற்கான நிதியை ஒதுக்கி பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.

Advertisement