திருமணமான பெண்ணுடன் ஓடியவரின் வீடு புல்டோசரால் தகர்ப்பு

22

பரூச் : திருமணமான பெண்ணுடன் ஒருவர் தலைமறைவானதால், அவரது வீடுகள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளை, உறவினர்கள் புல்டோசர் பயன்படுத்தி இடித்த சம்பவம் குஜராத்தில் சர்ச்சையாகி உள்ளது.


உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கலவரம் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் வீடுகள், விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தால், அவற்றை அரசே புல்டோசர் வைத்து இடித்து தள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.


குஜராத்திலும் இதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அதை செய்தது அரசு அதிகாரிகள் இல்லை. கிராமவாசிகள். குஜராத்தின் பரூச் மாவட்டம், கரேலி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமணமான பெண். இவருக்கும், வேறொரு நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த கணவரின் வீட்டினர், அப்பெண்ணை கண்டித்தனர்.


இந்நிலையில் அந்த பெண் தன் தாயை பார்க்க சொந்த ஊருக்குச் செல்வதாக கூறிவிட்டு, கடந்த வாரம் புறப்பட்டார். அதன் பின் வீடு திரும்பவில்லை. அவர் பழகி வந்த நபருடன் தலைமறைவானது தெரியவந்தது.


இதனால் ஆத்திரமடைந்த கணவன் குடும்பத்தினர், பெண்ணை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அந்நபரின் தாய் மட்டுமே இருந்தார். அவரிடம் 'இரண்டு நாட்களில் எங்கள் வீட்டு பெண் வீடு வந்து சேர வேண்டும்' என எச்சரித்துவிட்டு சென்றனர்.


இரண்டு நாள் கழித்தும் எந்த தகவலும் இல்லாததால், ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் வீட்டினர், பெண்ணை அழைத்துச் சென்றதாக கூறப்படும் நபரின் வீடு மற்றும் அவரின் உறவினர்கள் வீடு என, ஆறு வீடுகளை புல்டோசர் வைத்து இடித்துச் சேதப்படுத்தினர்.


இது குறித்து தலைமறைவாக உள்ள நபரின் தாய் போலீசில் புகாரளித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, பெண்ணின் கணவர் வீட்டினர் ஐந்து பேர் மற்றும் புல்டோசர் ஓட்டுநரை கைது செய்தனர்.

Advertisement