கூவம் ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டும் பணி ஜவ்வாக நடப்பதால் அதிருப்தி மழைக்காலத்திற்கு முன் பயன்பாட்டிற்கு வருமா?

மதுரவாயல்:மதுரவாயல் வழியாக செல்லும் கூவம் ஆற்றின் குறுக்கே, திருவேற்காடு, அடையாளம்பட்டு, மதுரவாயல், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், தரைப்பாலங்கள் உள்ளன.

ஒவ்வொரு மழைக்காலத்திலும், கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, தரைப்பாலங்கள் மூழ்கி, அப்பகுதிவாசிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

உயிரிழப்பு



சென்னையில், கடந்த 2022, நவம்பர் -- டிசம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலங்கள் மூழ்கின.

அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இதையடுத்து, மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே, உள் கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்ட நிதியின் கீழ், இரண்டு இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட, மாநகராட்சி திட்டமிட்டது.

அதன்படி, நொளம்பூர் யூனியன் சாலை - சன்னிதி முதல் குறுக்கு தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 31.65 கோடி ரூபாய் மதிப்பிலும்; சின்ன நொளம்பூர் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 42.71 கோடி ரூபாய் மதிப்பிலும், இரு உயர்மட்ட பாலங்கள் கட்ட, 2023, ஜூலை மாதம் பூஜை போடப்பட்டது.

ஆறு மாதங்களில் பணி முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் சின்ன நொளம்பூரை இணைக்கும் மேம்பால பணிகள் நடக்கும் இடம் வழியாக, 230 கிலோ வாட்ஸ் மின் வடம் செல்கிறது.

ஆமை வேகம்



இந்த மின் வடத்தை மாற்றி அமைக்க, மின் வாரியத்திற்கு 2.5 கோடி ரூபாய் கட்டப்பட்டது. இருந்தும், மின் வடங்கள் மாற்றி அமைக்க தாமதமானதால், கட்டுமானப் பணியை துவக்குவதில் தொய்வு ஏற்பட்டது.

தற்போது அப்பணிகள் முடிந்தும், பாலம் கட்டுமான பணி மந்தகதியில் நடக்கின்றன.

அதேபோல், நொளம்பூர் யூனியன் சாலை மற்றும் சன்னிதி முதல் குறுக்கு தெரு வழியாக அமைய உள்ள உயர்மட்ட பால பணிகள், நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தாமதமானது.

இப்பிரச்னை தீர்க்கப்பட்டும், ஆமை வேகத்திலே பணிகள் நடக்கின்றன.

இரு உயர்மட்ட பால பணிகளும், 50 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளதால், வரும் வடகிழக்கு மழைக்காலத்திற்கு முன், பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement