சைதை, கோட்டூர்புரத்தில் ரூ.395 கோடியில் 2,322 வீடுகள் பங்களிப்பை செலுத்த வாரியம் வலியுறுத்தல்

சென்னை:அடையாறு, கோட்டூர்புரத்தில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 1970--74 காலக்கட்டத்தில், 213 சதுர அடி பரப்பில், 1,656 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டன.

இதில், 180 வீடுகளை இடித்துவிட்டு, 2009, 2015ம் ஆண்டுகளில், 319, 385 சதுர அடி பரப்பில், புதிய வீடுகள் கட்டி, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

மீதமுள்ள, 1,476 வீடுகள் மிகவும் சேதமடைந்து, வசிக்க தகுதியற்றதாக இருந்தது. அவற்றை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட, வாரியம் முடிவு செய்தது.

இதற்காக, 2021 ஜூலையில் கருத்து கேட்பு முடிந்து, 1,476 குடும்பத்தினர் வாடகை வீடுகளில் தங்க வசதியாக, தலா, 24,000 ரூபாய் வழங்கப்பட்டது.

மொத்தமுள்ள, 5.10 லட்சம் சதுர அடி பரப்பில், 307 கோடி ரூபாயில், தலா, 400 சதுர அடி பரப்பில், 1,800 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பு, ஆறு மாடிகளுடன், 17 பிளாக்குகளாக கட்டப்படுகிறது.

அதேபோல், சைதாப்பேட்டை, அப்பாவுநகரில், 1.21 லட்சம் சதுர அடி பரப்பில், 290 வீடுகள் இருந்தன. இந்த வீடுகளையும் இடித்து விட்டு, 88 கோடி ரூபாயில், 6 மாடிகள் கொண்ட, ஆறு பிளாக்குகளில், 522 வீடுகள் கட்டப்படுகின்றன.

இதுகுறித்து, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

இரு திட்டங்களிலும், கட்டடத்தின் பாகங்களை வேறு இடத்தில் தனித்தனியாக தயாரித்து கொண்டு வந்து, கட்டுமான இடத்தில் பொருத்தும், 'பிரிகாஸ்ட்' முறையில் கட்டப்படுகிறது.

அடையாறு ஆற்றை ஒட்டிய பகுதி என்பதால், தரைத்தளத்தில் பார்க்கிங் வசதி, லிப்ட், ஜெனரேட்டர், பூங்கா, மைதானம் உள்ளிட்ட வசதிகளுடன், தனியார் அடுக்குமாடி குடியிருப்பை போல் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும்.

பங்களிப்பு தொகையாக, கோட்டூர்புரம் குடியிருப்பில் வசித்தவர்கள், 1.50 லட்சம் ரூபாய்; சைதாப்பேட்டை குடியிருப்பில் வசித்தோர், 66,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

இப்போதே, அந்தந்த வாரிய அலுவலகங்களில் செலுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement