நகராட்சிக்கூட்டத்தில் நுழைந்த ஒப்பந்ததாரர் கவுன்சிலர்கள் எதிர்ப்பு

விருதுநகர் : விருதுநகர் நகராட்சிக் கூட்டத்தில் நுழைந்து தி.மு.க., நிர்வாகியும், ஒப்பந்ததாரருமான கார்த்திக்கேயன் பதில் கூறியதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விருதுநகரில் நகராட்சி கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. கமிஷனர் சுகந்தி, பொறியாளர் எட்வின்பிரைட்ஜோஸ் முன்னிலை வகித்தனர்.

நகராட்சியில் சொத்து வரியை அரசு ஆணையின்றி குடியிருப்போருக்கு தெரியாமல் பலமடங்கு உயர்த்தியது ஏன். வரி உயராது என நகர்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கூறியுள்ளாரே என செய்தித் தாளில் வந்த தகவலை பதாகையாக்கி காங். கவுன்சிலர் ராஜ்குமார் காண்பித்தார். இதையடுத்து மறைமுகமாக உயர்த்திய சொத்து வரியை ரத்து செய்ய வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பில் ஈடுபட்டனர். உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்காவிட்டால், எனது பதவி ராஜினமா செய்வேன் என தி.மு.க., கவுன்சிலர் கலையரசன் தெரிவித்தார்.

சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியில் எவ்வித பணியும் நடக்கவில்லையென அந்த வார்டு கவுன்சிலர் பணப்பாண்டி தெரிவித்தார். அப்போது அங்கு வாறுகால் கட்ட டென்டர் விட்டு ஓராண்டு காலம் ஆகியும் ஏன் பணிகள் நடக்கவில்லை என மார்க்சிஸ்ட் கவுன்சிலர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய தலைவர், யார் ஒப்பந்ததாரர், ஏன் பணி செய்யவில்லையென என பொறியியல் பிரிவு அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அத்துமீறி உள்ளே நுழைந்த ஒப்பந்தாரர் கார்த்திகேயன், அந்த டெண்டரை ரத்து செய்து 6 மாதம் ஆகி விட்டது என மிரட்டல் விடும் வகையில் கூறினார்.

அப்போது கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர் எப்படி கூட்டம் நடக்கும் இடத்திற்குள் வரலாம் என்றனர். இதையடுத்து தலைவர் அவரை வெளியேற்ற உத்தரவிட்டார். இக் கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement