காமெடியன் குணால் காம்ராவுக்கு நெருக்கடி; மேலும் 3 வழக்குகள் பதிவு

1

மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த காமெடியன் குணால் காம்ரா மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மஹாராஷ்டிராவை சேர்ந்த ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் காம்ரா, அரசியல் தலைவர்களை நையாண்டி செய்யக்கூடியவர்.

அண்மையில் மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவை பெயர் குறிப்பிடாமல் துரோகி என்று விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு சிவசேனா கட்சியினர் அச்சுறுத்தல் விடுத்தனர். அவரது நிகழ்ச்சி நடந்த ஹோட்டல் தாக்கப்பட்டது. மும்பையில் அவர் மீது வழக்கும் பதியப்பட்டது.

இது தொடர்பாக மும்பை போலீஸார் இருமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், ஆஜராக அவகாசம் கேட்டுள்ளார். இதனிடையே, குணால் காம்ராவுக்கு சென்னை ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், குணால் காம்ரா மீது இன்று மேலும் 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஜல்கான் நகர சிவசேனா கட்சி தலைவர் சஞ்ச்ய் புஜ்பால், நந்கோன் நகர சிவசேனா கட்சி தலைவர் சுனி ஜாதவும், மேன்மேட் நகர சிவசேனா தலைவர் மயூர் போர்ஸ் ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், " மாநிலத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் குணால் காம்ராவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எங்கள் காவல்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டியோவில் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதால், வழக்குகள் எங்கள் காவல் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல், அப்படி 3 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் மீண்டும் கார்கர் காவல்நிலையத்தில் மறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக இணைத்து விசாரணை நடத்தப்படும்," என்று கூறினர்.

Advertisement