மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்

73

புதுடில்லி: '' மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


டில்லியில் பா.ஜ., மகளிர் அணி சார்பில், பெண் சுதந்திர போராட்ட வீராங்கனைகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.


இதில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:


இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில், ராணிவேலு நாச்சியாரின் வாழ்க்கை, பொற்காலமாக உள்ளது. தைரியத்திற்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய முதல் அரசி ஆவார்.

ராணிவேலுநாச்சியார், மக்களுக்கு ஆதரவான ஆட்சியாளர் ஆக இருந்தார். அத்துடன், உண்மையான தலைமைத்துவம் என்பது, தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதில் இல்லை. அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிராக போராடுவதில் உள்ளது என்பதை தனது தைரியம் மற்றும் தலைமைப் பண்பு மூலம் நிரூபித்தார்.

தமிழகத்தில், ராணி வேலு நாச்சியாருடன், ராணி மங்கம்மாளும் சிறந்த பெண் ஆட்சியாளராக இருந்தார். அவர் தனது ஆட்சியை காத்ததுடன், ஏராளமானமக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வந்தார்.அவர் உள்கட்டமைப்பு திட்டத்தில் ஏராளமான முதலீடு செய்தார். சாலைகள் அமைப்பதிலும் , மக்களுக்கு சுத்தமான குடிநீர்வழங்குவதிலும் கவனம் செலுத்தினார். நெடுஞ்சாலை கட்டமைத்த பெருமை அவருக்கு உள்ளது.

பெண்களிடம் உள்ள சகிப்புத்தன்மை , இரக்கம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் வலிமை எந்த ஒரு போராட்டத்திற்கும் தார்மீக உயர்வை அளிக்கும் என மஹாத்மா காந்தி நம்பினார். அஹிம்சை இயக்கத்தின் மையமாக பெண்களை மாற்றினார்.

சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு ஆகிய போராட்டங்களில் பெண்கள் பங்கேற்ற போது அது தேசிய அளவிலான இயக்கமாக மாறியது. அனைத்து வீடுகள், வீதிகள் மற்றும் கிராமங்களில்இந்த போராட்டங்கள் நடந்தன.

பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மஹாத்மா காந்தி ஊக்கமளித்தார். இதனால், சரோஜினி நாயுடு உள்ளிட்ட ஏராளமான பெண்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பெண்கள் பங்கேற்பு காரணமாக சுதந்திர போராட்டம் மாபெரும் இயக்கமாக மாறியது.


நாட்டின் வரலாற்றை பார்த்தால், பெண்கள் பொது வாழ்க்கையில் பங்கேற்கும் போது, புதிய இந்தியா உருவாகிறது.

சிலர் ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகள் தொடர்பாக சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர். ஹிந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளின் பெருமையை பாதுகாக்க பா.ஜ, பணியாற்றி வருகிறது. காசிதமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.


ஹிந்தி உள்ளிட்ட எந்தவொரு இந்திய மொழிகளும் ஒன்றுக்கு ஒன்று போட்டி அல்ல. அவற்றுக்கு இடையே ஒற்றுமை உள்ளது. அனைத்து இந்திய மொழிகளையும் ஹிந்தி பலப்படுத்துகிறது. அனைத்து இந்திய மொழிகளில் இருந்து ஹிந்தி பலன்பெறுகிறது. மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement