இந்தியா - பிரேசில் இடையே கால்பந்து போட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை, சென்னை, பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில், இன்று இரவு 7:00 மணிக்கு இந்தியா - பிரேசில் அணிகளுக்கு இடையே, 'பிபா' கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.

இது குறித்து போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இதற்காக மாலை 3:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளன.

* வாகன நிறுத்தத்திற்கான இடம் குறைவாக இருப்பதால், பார்வையாளர்கள் பொது போக்குவரத்துகளான ரயில் மற்றும் மாநகர பேருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு வருவோர் வி.பி., பூங்கா சாலை வழியாக சென்று மைதானத்தின் பின்புற நுழைவு வாயிலாக மைதானத்தை அடையலாம்.

* சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வரும் பார்வையாளர்கள், பூங்கா சாலையில் வலதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புற வழியாக பி மற்றும் சி மைதானத்தில், வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.

* ராஜா முத்தையா சாலையில் மாநகர பேருந்துகள் இயக்க தடைவிதிக்கப்படும். அதற்கு பதிலாக அவ்வாகனங்கள் ஈ.வி.ஆர்., சாலை, ஈ.வி.கே., சம்பத் சாலை, டவுட்டன், நாராயணகுரு சாலை, சூளை நெடுஞ்சாலை மற்றும் டெமெல்லஸ் சாலை வழியாக செல்லலாம்.

* எழும்பூர் ரயில் நிலையம் வழியாக வாகனங்களில் வரும் பார்வையாளர்கள், நேராக சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று, பூங்கா சாலை இடதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புறம் வழியாக வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்.

* அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, சூளை ரவுண்டானாவில் இருந்து, நேரு விளையாட்டு மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும்.

அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சூளை நெடுஞ்சாலை, ஈ.வி.கே., சம்பத் சாலை, ஈ.வி.ஆர், சாலை, வழியாக திருப்பி விடப்படுவர்.

* மேலும் அதிக போக்குவரத்து நெரிசலின் போது, ஜெர்மியா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து, நேரு ஸ்டேடியம் நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

* சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் போட்டியை பார்வையிட வரும் பார்வையாளர்கள், அன்ட்ரஸ் சாலையில் உள்ள கார்ப்பரேஷன் மைதானம், வேப்பேரி நெடுஞ்சாலை, கண்ணப்பர் திடல், கே.பி.,கார்ப்பரேஷன் மைதானங்களில் நிறுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement