செய்தி எதிரொலி பலமிழந்த நீர்த்தேக்க தொட்டி பாதுகாப்பாக இடித்து அகற்றம்

அச்சிறுபாக்கம்:இரும்புலி ஊராட்சியில், விழும் நிலையிலிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இரும்புலி ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அதில், இரும்புலி -- சோத்துப்பாக்கம் சாலையில், 25 ஆண்டுகளுக்கு முன், மக்களின் குடிநீர் தேவைக்காக, குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றி, குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உறுதியிழந்த நிலையில், அசம்பாவிதம் ஏற்படும் முன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக நேற்று, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பாதுகாப்பாக இடித்து அகற்றப்பட்டது.

Advertisement