அச்சிறுபாக்கம் ஆதார் மையத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல்படும், ஆதார் நிரந்தர பதிவு மையத்தில், இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.
அதில், பேரூராட்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ், ஆதார் நிரந்தர பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.
அதில், ஆதார் அட்டை புதிதாக பதிவு செய்தல், புதுப்பித்தல், மொபைல்போன் எண் மாற்றுதல், புகைப்படம் மாற்றுதல், முகவரி திருத்தம் செய்தல் போன்ற சேவைகள் செய்யப்படுகின்றன.
அதனால், அச்சிறுபாக்கம் பேரூராட்சி மட்டுமல்லாது, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகின்றனர்.
நாள்தோறும் 30-க்கும் மேற்பட்டோர் மையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள், கர்ப்பிணியர், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்களும் ஆதார் மையத்திற்கு வந்து செல்கின்றனர்.
அங்கு, இருக்கை வசதிகளின்றி உள்ளதால், ஆதார் மையத்தின் வாசல் எதிரே, வெயிலில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள மரத்தடியில் அமர்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி கூரை அமைத்து, இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தர, பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.