பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டுஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை

தர்மபுரி:பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, ஆஞ்சநேயர் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி எஸ்.வி., சாலையில் உள்ள, அபய ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாளான நேற்று, ஆஞ்சநேயருக்கு பால், நெய், இளநீர், பழங்கள், சந்தனம், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷே கம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அபய ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல், நல்லம்பள்ளி அருகே உள்ள முத்தம்பட்டி வன பகுதியில் உள்ள, வீர ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் கணவாய் பகுதியிலுள்ள மன்றோ குளக்கரை ஜெய வீர ஆஞ்சநேயர், தர்மபுரி மின் பகிர்மான அலுவலகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் உட்பட தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன.

Advertisement