தென்பெண்ணை - பாலாறு இணைப்புக்கு கள்ளக்குறிச்சி விவசாயிகள் கடும் எதிர்ப்பு 

கள்ளக்குறிச்சி:தென்பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டத்திற்கு கள்ளக்குறிச்சி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சில தினங்களுக்கு முன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டசபையில் தெரிவித்தார். மேலும், 'தென்பெண்ணை- - பாலாறு இணைப்பு திட்டமும் செயல்படுத்தப்படும்' எனறார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயி ஒருவர் பேசுகையில், 'கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர்' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார்.

'அதுபோல தான், சாத்தனுார் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டினாலும், தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினாலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்திற்கு கள்ளக்குறிச்சி விவசாயிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்' என்றார்.

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்திற்கு உள்ளூர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement