'சுகாதாரம் காக்க வேறு வழியில்லை' திருப்பூர் அருகே ஹிந்தியில் அறிவிப்பு

2

திருப்பூர்:திருப்பூர் அருகே முதலிபாளையம் ஊராட்சி சார்பில், சுகாதாரம் காக்க வேண்டி, தமிழ், ஹிந்தி என இருமொழிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

தொழில் நிமித்தமாக, வடமாநிலங்களுக்கு சென்று வரும் பனியன் தொழில்துறையினர், ஹிந்தி கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதாவது, ஆங்கிலத்தைக் காட்டிலும், ஹிந்தியில் பேசினால் மட்டுமே, பல மாநிலங்களில் வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலை இன்றும் தொடர்கிறது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், திருப்பூரில் பனியன் தொழிலாளர்களாக உள்ளனர்.

இதனால், திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீதியிலும், வடமாநில தொழிலாளர் வசிக்கின்றனர். ஒரு வீதியில் செல்லும்போது, ஒரு சில வடமாநில தொழிலாளரைக்கூட பார்க்காமல் செல்ல முடியாது என்ற அளவுக்கு, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். நாளுக்கு நாள் செலவு அதிகரிப்பதால், நகரை சுற்றியுள்ள கிராமங்களில் குடியேறி விட்டனர்.

குறிப்பாக, 'சிட்கோ' வளாகத்தில் உள்ள தொழிற்பேட்டைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள், முதலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர்.

சில ஆண்டுகளாக, வடமாநில தொழிலாளர் வசிக்கும் வீடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சந்தை கூடும் நாளில், திருவிழா கூட்டம் போல் கூட்டம் சேர்கின்றனர். இதனால், பொது சுகாதாரம் தொடர்பான அறிவிப்பாக இருந்தாலும், ஊராட்சி நிர்வாகம் ஹிந்தியிலும் வெளியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அவ்வகையில், முதலிபாளையம் ஊராட்சியின் சுகாதார நலன் கருதி, பொது இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது; குப்பைத் தொட்டியில் மட்டும் கொட்ட வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள், தமிழ் மற்றும் ஹிந்தி என, இருமொழிகளில் அறிவித்துள்ளனர்.

முதலிபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'முதலிபாளையம் ஊராட்சியில் வடமாநில தொழிலாளர் அதிகம் வசிக்கின்றனர். சுகாதாரம் மற்றும் பொதுநலன் கருதி வெளியிடப்படும் அறிவிப்புகளை, தனியார் அமைப்புகள் வெளியிடும்போது, ஹிந்தியிலும் வெளியிடுகின்றனர். அவ்வகையில், ஊராட்சி சார்பிலும், ஹிந்தி மொழியிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டியுள்ளது' என்றனர்.

Advertisement