செவிலிமேடு - கீழம்பி இருவழி சாலையை நான்குவழியாக மாற்றும் பணி தீவிரம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து, சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கீழம்பி செல்லும் புறவழிச்சாலை, 8 கி.மீ., நீளம் உள்ளது.

உத்திரமேரூர், வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து, வேலுார், பெங்களூரு, அரக்கோணம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் செவிலிமேடு - கீழம்பி புறவழி சாலை வழியாக சென்று வருகின்றன.

இச்சாலையில், அதிக பாரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களால், பல இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியதோடு, புழுதி பறக்கும் சாலையாக மாறியது.

மேலும், இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே, இச்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து கடந்த ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.எல்.ஏ., எழிலரசன், கீழம்பி புறவழிச் சாலையை, நான்குவழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

இதையடுத்து, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், செவிலிமேடு -- கீழம்பி புறவழி சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற, தமிழக அரசு 42 கோடி ரூபாயை ஒதுக்கியது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரியில் நான்குவழிச் சாலையாக மாற்றம் செய்யும் பணி துவங்கியது. தொடர்ந்து சாலை விரிவாக்கத்திற்கான பணி மும்முரமாக நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

செவிலிமேடு -- கீழம்பி புறவழிச் சாலை 8 கி.மீ., நீளமும், 10 மீட்டர் அகலம் கொண்டது. இச்சாலையை, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 16.2 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் செய்து, நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டு, சாலையின் மையப் பகுதியில் மீடியன் அமைக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் இடையூறாக மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, இச்சாலையின் குறுக்கே செல்லும் 37 சிறுபாலங்களும் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

வரும் 2026ம் ஆண்டு, பிப்., மாதத்திற்குள் பணி முடிக்கப்பட்டு நான்குவழிச் சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், சாலை விரிவாக்க பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement