கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொன்றவர் கேரளாவில் கைது

திருவனந்தபுரம்:கர்நாடகாவில் குடும்பத்தகராறில் மனைவி, மகன், மாமனார், மாமியார் என ஒரு குடும்பத்தையே வெட்டி கொலை செய்தவரை கேரளாவில் போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்தவர் கரியன் 70. மனைவி கவுரி 65. இவர்களது மகள் நாஹி 34. இவருக்கும் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் திருநெல்லியைச் சேர்ந்த கிரீஷ் 38, என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு காவேரி 5, என்ற மகள் இருந்தார். கிரீஷும், நாஹியும் கேரளாவில் தங்கி கூலி தொழில் செய்தனர்.

இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில் மாமனார் வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு குடியேறினர். அங்கும் இருவருக்கும் தகராறு நீடித்தது.

இந்நிலையில் இவர்களது வீடு தொடர்ச்சியாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் கதவை தட்டிய போது யாரும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அங்கு கரியன், கவுரி, நாஹி, காவேரி ஆகியோர் ரத்தம் சூழ இறந்து கிடந்தனர். இது குறித்து குடகு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி., ராமராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கிரிஷ் அவர்களை கொலை செய்தது உறுதியானது. அவர் கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என கருதிய குடகு போலீசார் கேரள மாநில போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வயநாடு மாவட்டம் தலப்புழா என்ற இடத்தில் தங்கியிருந்த கிரீஷை கேரள போலீசார் கைது செய்து குடகு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement