பழவேரியில் கனரக வாகனங்களால் மண் புழுதி சாலையில் தண்ணீர் தெளிக்க வலியுறுத்தல்

பழவேரி:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பழவேரி கிராமம். இக்கிராமத்தில், சுண்ணாம்புக்குளம் அருகே பிரிந்து, பினாயூர் மலையடிவாரம் வழியாக திருமுக்கூடல் பாலாற்று பாலத்தை இணைக்கும் 3 கி.மீ., துாரம் கொண்ட சாலை உள்ளது.

மதுார், சிறுதாமூர், சித்தாலப்பாக்கம், பட்டா, பினாயூர், அருங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பழவேரி மற்றும் பினாயூர் மலையடிவார சாலை வழியாக இயக்கப்படுகிறது.

இரவு, பகலாக இயங்கும் இத்தகைய வாகனங்களால், இச்சாலை மிகவும் சிதிலமடைந்து கார், வேன் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்குவதில் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், தற்போது வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால், இச்சாலையில் மண்புழுதி அதிகரித்து சாலையில் பரவி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் விதமாக உள்ளது. இரவு நேரங்களில் மண் புழுதியால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, பழுதடைந்த இச்சாலையை சீரமைப்பதோடு, தற்காலிகமாக பழவேரி முதல், திருமுக்கூடல் பாலாற்று பாலம் வரையிலான சாலையில், நாளொன்றுக்கு மூன்று முறை தண்ணீர் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement