ஐந்து வீடுகளில் திருட்டு பூண்டி அருகே துணிகரம்

திருவாலங்காடு:திருவள்ளூர், பூண்டி ஒன்றியம் எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60. இவர், குடும்பத்துடன் கடந்த சில மாதங்களாக சென்னையில் வசித்து வருகிறார்.

அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த சசி, 45, சரவணன், 33, கார்த்திகேயன், 34, வெங்கடேசன், 42, ஆகியோர், குழந்தைகளின் படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக, அங்குள்ள வீடுகளை பூட்டிவிட்டு, திருவள்ளூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஐந்து பேரின் வீடுகள் தொடர்ந்து பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டனர்.

இதில், ராஜேந்திரன் என்பவரின் வீட்டு பீரோவில் இருந்த 25,000 ரூபாய்; மற்றவர்களின் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் திருடிச் சென்றுள்ளனர்.

ஒரே இரவில், அடுத்தடுத்து ஐந்து வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பகுதிவாசிகள், கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement