மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'

லக்னோ: உ.பி.,யில் உயிர் பயத்தில் மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவன், ஒரு சில நாட்களில் அவரை மீண்டும் அழைத்து வந்தார்.
உ.பி.,யின் சந்த் சபீர் நகரின் கடார் ஜாட் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பப்லு. இவர் கடந்த 2017 ம் ஆண்டு கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெளியூரில் வேலை செய்து வந்த பப்லுவுக்கு, அவரது மனைவிக்கும் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் இடையே தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்தது.
ஊர் திரும்பிய பப்லு இது குறித்து விசாரித்ததில், 18 மாதங்களாக , ராதிகா வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததை தெரிந்து கொண்டார். யாரும் எதிர்பார்க்காத நிலையில், தன் மனைவியை அவருடைய காதலனுக்கு திருமணம் செய்து வைத்தார். குழந்தைகளை தானேவளர்ப்பதாகவும் கூறிய அவர், காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவர்களை கொலை செய்யும் சம்பவங்களால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
தொடர்ந்து ராதிகா, காதலன் விகாஸ் என்பவரது வீட்டில் வாழ்ந்து வந்தார்.
ஆனால், ராதிகாவின் புதிய மாமியாருக்கு, தனது மருமகள் இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுப் பிரிந்து வந்தது பிடிக்கவில்லை.
குழந்தைகள் தாயார் இல்லாமல் வாழ்வது கஷ்டம். அப்படி ஒரு சூழ்நிலை குழந்தைகளுக்கு வேண்டாம். நீ மீண்டும் உன் பழைய கணவன் பப்லுடன் சென்று சேர்ந்து கொள் என்று விகாஸின் தாயார் அறிவுரை கூறினார்.
இதனை ஏற்றுக் கொண்ட ராதிகா, தன் பழைய கணவனை தேடிச் சென்றார்.
பப்லுவும் இதை ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக பப்லு கூறுகையில், ராதிகா வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது உண்மை. அவர் அப்பாவி. அவர் மீண்டும் வந்துவிட்டார். அனைத்துக்கும் நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். இனிமேல் குடும்பமாக வாழ்வோம் என்றார்.








