உலக தண்ணீர் தின விழிப்புணர்வு

கொரட்டூர்:உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், நீர் ஓட்டம் நிகழ்வு நேற்று காலை நடந்தது. இந்த ஓட்டத்தை, ஆவடி போலீஸ் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

கொரட்டூர் ஏரியின் மேற்கு பகுதியில் துவங்கி, சீனிவாசபுரம் இரண்டாவது பிரதான சாலை, சிவலிங்கபுரம், சீயாத்தம்மன் கோவில் வழியாக, 4 கி.மீ., துாரம் சென்று, கொரட்டூர் ஏரியின் கிழக்கு பகுதியில், ஓட்டம் முடிவடைந்தது.

இதில், கொரட்டூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நீரின் அவசியம், சிக்கனமாக பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவை குறித்து, முகப்பேர் அரசு பள்ளி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடந்தன.

Advertisement