கூடுதல் பெட்டிகளுடன் ரயில்களை இயக்க பயணிகள் வலியுறுத்தல்

1

மதுரை: கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க வந்தே பாரத் உள்ளிட்ட முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6:45 மணிக்கு வைகை, காலை 7:55 மணிக்கு நெல்லையில் இருந்து வரும் வந்தே பாரத் ரயில்கள் செல்கின்றன. இரு ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது. 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டும் வந்தே பாரத்தில் காத்திருப்போர் பட்டியல் தொடர்வதால் முன்பதிவு செய்யும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். இரு ரயில்களை தவிர்த்து சென்னை செல்ல காலை 11:20 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது. இது கேரளாவில் இருந்தே கூட்டத்துடன் வருகிறது. மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு வாராந்திர ரயில்களே உள்ளன. இவ்வழித்தடத்தில் தினசரி ரயில்களை இயக்கவும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். செங்கோட்டை - மயிலாடு துறை ரயிலில் கூட்டம் நிரம்பி வழிவதால் பெட்டிகளின் கதவருகே அமர்ந்து பயணிக்கும் நிலையுள்ளதாகவும் வேதனைப்படுகின்றனர்.

தென்னக ரயில்வே பயணிகள் சங்கம் பொது செயலாளர் பத்மநாதன் கூறியதாவது: 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டும் காத்திருப்போர் பட்டியல் தொடர்வதால் நெல்லை வந்தே பாரத் ரயிலை 20 பெட்டிகளுடன் இயக்க வேண்டும். மதுரை - தாம்பரம் இடையே காலை 10:00 மணிக்கு புறப்படும் வகையில் பகல் நேர விரைவு ரயில் விட வேண்டும். செங்கோட்டை - மயிலாடுதுறை ரயிலில் 8 பெட்டிகளை கூடுதலாக இணைத்து 20 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என்றார்.

Advertisement