ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கலெக்டர் 'அட்வைஸ்'

கள்ளக்குறிச்சி : ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள், பள்ளிப்படிப்புடன் நிறுத்தாமல், உயர்கல்வி பயில வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் பேசினார்.

மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, நீலமங்கலம் தனியார் பள்ளியில் நடந்தது. இதில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மாணவர்கள் பிளஸ் 2 வகுப்புடன் படிப்பை நிறுத்தாமல், மேற்படிப்பு படிக்க வேண்டும். அனைத்து வகை போட்டி தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டும். மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்க வேண்டும். ஆசிரியருடன் கலந்துரையாடினால் நல்ல முடிவுகளை எடுக்க வாய்ப்பாக இருக்கும்.

அரசு பணி வாய்ப்பை விட, தனியார் பணி வாய்ப்புகளே இன்றைய காலத்தில் அதிகளவில் உள்ளன. எதிர்கால வாழ்விற்கு தேவையான பட்டபடிப்பை தேர்வு செய்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சி.இ.ஓ., கார்த்திகா, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement