உயர் கல்விக்கு வழிகாட்டும் தினமலர் நாளிதழின் இறைபணி வங்கியாளர் விருத்தாசலம் பெருமிதம்

புதுச்சேரி : தினமலர் நாளிதழ், வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு இறைப்பணியை செய்து வருகிறது என, வங்கியாளர் விருத்தாசலம் பேசினார்.

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தினமலர் நாளிதழ், மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தி, இறைப்பணியை செய்து வருகிறது. வழிகாட்டல் இல்லாத மனித வாழ்க்கை இல்லை. தினமலர் நாளிதழ், நம் குடும்ப உறுப்பினர்கள் போன்று நல்ல ஒரு வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சி மூலம் 1 லட்சம் மாணவர்களுக்கு கருத்து கூறியுள்ளேன்.

மேற்படிப்பு தொடர் பணம் தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக, மத்திய அரசால் கல்விக் கடன் திட்டம் கொண்டுவரப்பட்டது. வங்கிகள் மூலம் கடந்த 2024ம் ஆண்டு மட்டும் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவம், பாரா மெடிக்கல், கலை, அறிவியல் மற்றும் பொறியியல், ஆராய்ச்சி கல்வி என, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. உரிய ஆவணங்களை கொடுத்தால், கல்வி கடன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.

வங்கிகளில், ரூ. 4 லட்சம் வரை கல்வி கடன் பெற, பெற்றோர் பங்களிப்பு தேவையில்லை. முழுமையாக வங்கியே அந்த தொகையை கொடுக்கும். ரூ. 7 லட்சம் வரை இருந்தால் 5 சதவீதம் பெற்றோர் பங்களிப்பு இருக்க வேண்டும். ரூ. 7.50 லட்சம் வரை எந்தவித செக்யூரிட்டியும் தேவையில்லை. அதற்கு மேல் இருந்தால், செக்யூரிட்டி தேவைப்படும்.

இதேபோன்று, ஆண்டு வருமானம் ரூ. 4.50 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் கல்வி கடனிற்கான வட்டியை மத்திய அரசு செலுத்திவிடும்.

அதிலும், பெண் குழந்தையாக இருந்தால் வட்டியில் 5 சதவீதம் குறைக்கப்படும்.

அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுகளை படித்தால், மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும். பெற்றோர் நிலையை புரிந்து மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். மாணவர்கள் சாதித்து பெற்றோரை பெருமைப்படுத்த வேண்டும். தன்னம்பிக்கை, திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement