உயர்கல்வி சேர்வோர் 100 சதவீதமாக உயர்த்த இலக்கு

திருப்பூர்; ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 2024-25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியருக்கு, உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி வரவேற்றார்.

பெலிக்ஸ், சிரிஜித் சுந்தரம் ஆகியோர் 'உயர்கல்வித் தேர்வு செய்தல்' குறித்து பேசினர். கலெக்டர் கிறிஸ்துராஜ், வழிகாட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:

மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, வாய்ப்புகள் அதிகம் உள்ள உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு, மாதம், 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தால், மேல்நிலை கல்வி தொடர்வது அதிகரித்துள்ளது. கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்தவர்களில், 97 சதவீதம் பேர் உயர்கல்வியை கல்லுாரிகளில் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டில், தேர்ச்சி பெற்ற அனைவரும், கல்லுாரி படிப்பை தொடர வேண்டும் என்பதே, அரசின் நோக்கம்.

மாணவ, மாணவியருக்கு, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், கலை மற்றும் அறிவியல், சட்ட படிப்பு, டிப்ளமோ என, பல்வேறு படிப்புகள் உள்ளன. தங்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்வு செய்து படித்து, தங்கள் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

உதவி திட்ட அலுவலர் (பள்ளிக்கல்வி) அண்ணாதுரை, தனி தாசில்தார்கள் (ஆதிதிராவிடர் நலம்) தேவராஜ், நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

---

2 படங்கள்

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 2024-25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியருக்கு, உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அரங்கில் இடம் இல்லாததால் நின்றுகொண்டிருந்த மாணவ, மாணவியர்.

அரங்குக்கு வெளியே, காத்திருந்த மாணவ, மாணவியர் - பெற்றோர்.

கால்கடுக்க நின்ற மாணவர், பெற்றோர்

உரிய முன்னேற்பாடு செய்யாததால், கடைசியில் வந்த மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர், கால்கடுக்க நின்றனர்; கூட்டரங்கு கதவு மூடப்பட்டதால், சிலர் ஏமாற்றத்துடன் வெளியே காத்திருந்தனர்.

Advertisement