அவதுாறு பரப்புகின்றனர்; விசைத்தறியாளர் வேதனை

பல்லடம்; திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி சங்க தலைவர் வேலுசாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் அளித்த மனு:

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி சங்கத்தின் கீழ், பல்லடம், மங்கலம், வேலம்பாளையம் மற்றும் கண்ணம்பாளையம் ஆகிய சங்கங்கள் உள்ளன. விசைத்தறி கூலி உயர்வை வலியுறுத்தி, சோமனுாரை தலைமையிடமாகக் கொண்ட, சோமனுார், அவிநாசி, தெக்கலுார், பெருமாநல்லுார், புதுப்பாளையம் ஆகிய சங்கங்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், பல்லடம் சங்கத்துடன் இணைந்துள்ள பகுதிகள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கிடையே, மேற்கூறிய இரண்டு பகுதிகளை சேர்ந்த விசைத்தறியாளருக்கு இடையே கலவரத்தை துாண்டும் விதமாக சிலர், சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பி வருகின்றனர்.

கடந்த, 30 ஆண்டுகளாக விசைத்தறி சங்க பொறுப்பில் இருந்து பணியாற்றி வருகிறோம். சமூக வலைதள அவதுாறுகளால், எங்கள் தனிப்பட்ட பெயருக்கு களங்கம் ஏற்படுவதுடன், விசைத்தறியாளர்கள் இடையே கலவரத்தை துாண்டவும் முயற்சி நடந்து வருகிறது. அவதுாறு பரப்பி வருபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement