வெயில் தாக்கத்தால் பயிர் விளைச்சல் பாதிக்க வாய்ப்பு

போடி : தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜன., பிப்., மார்சில் மழை பெய்யாததால் மானாவாரி பயிர்கள் சாகுபடி பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரியில் 29.8 மி.மீ., பிப்ரவரியில் 24.1 மி.மீ., மழை பெய்யும்.

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மார்ச் முடியும் நிலையில் இன்று வரை மழை பெய்யவில்லை.

நெல், மக்காச்சோளம், சிறுதானியங்கள், பயிர் வகைகள், பருத்தி, தோட்ட பயிர்கள் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு உள்ளன. இப்பயிர்கள் வளர்ச்சி பருவத்தில் இருந்தும் மழை சிறிதளவு கூட இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் ஆற்றுப் பகுதிகளில் நீர்வரத்து இன்றி, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நிலங்களும் வறண்டு காணப்படுகின்றன. மழை இல்லாததால் இந்தாண்டு மானாவாரி பயிர்களின் விளைச்சல் குறைய வாய்ப்பு உள்ளது என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement