அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்; காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை

திருக்கனுார் : கூனிச்சம்பட்டில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் வேதனைக்கு அடைந்து வருகின்றனர்.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, பி.எஸ்.பாளையம், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் நெல், கரும்பு உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகின்றனர்.

இந்தபகுதிகளில் உள்ள ஆறு மற்றும் ஏரிப்பகுதியில் சுற்றித்திரிந்து வரும் காட்டுப் பன்றிகள் விவசாயிகள் பயிரிட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள விளை நிலங்களுக்கு இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக வந்து, அனைத்து பயிர்களையும் சேதப்படுத்தி விட்டு சென்று விடுகின்றன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே, காட்டு பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க விவசாயிகள், இரவு நேரங்களில் ஒலி பெருக்கிகள் மூலம் பல்வேறு விலங்குகளின் குரலில் சத்தம் எழுப்பியும், வெடிகள் வெடித்தும் வருகின்றனர். இருப்பினும், காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால், விவசாயிகள் தற்போது செய்வது அறியாமல் திகைத்து வருகின்றனர்.

எனவே, காட்டுபன்றிகளை விரட்டவும், வனவிலங்குகள் மூலம் சேதப்படுத்தப்படும் விவசாய நிலங்களை, அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement