டிரம்ப் எச்சரிக்கையால் ஆத்திரம்; ஏவுகணைகளுடன் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்

9


தெஹ்ரான்: அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதிநவீன ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த ஈரான் ஆயத்தமாகியுள்ளது. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்காக உலக நாடுகளால் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருவதாக ஈரான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.


இதனிடையே, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக ஈரானுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், 'அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் விதமான, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும். தவறினால், ராணுவத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்,' என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.


மேலும், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஈரான் மீது 2வது கட்ட வரிவிதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்தார். ஆனால், இதனை பற்றி அலட்டிக் கொள்ளாத ஈரான், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வருகிறது.


இந்த நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தங்களிடம் உள்ள அதிநவீன ஆயுதங்கள் குறித்த வீடியோவை ஈரான் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். நிலத்தடி ஏவுகணை தளங்களில் ஹெய்பர் ஷேகன், ஹஜ் குவாசெம், செஜ்ஜில், இமாத் உள்ளிட்ட தொலைதூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்த நிலையில், அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement