பரந்துார் ஏர்போர்ட் நிலம் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னைபரந்துார் விமான நிலையத்துக்கு, ஸ்ரீபெரும்புதுார் மகாதேவி மங்கலம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நெருக்கடியை குறைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில், 34,000 கோடி ரூபாய் செலவில், பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்துக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள 20 கிராமங்களில், 5,746 ஏக்கர் நிலம் தேவை. இதில், 1,972 ஏக்கர் அரசு நிலத்தையும், 3,774 ஏக்கர் தனியார் நிலத்தையும் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, மகாதேவி மங்கலம் கிராமத்தில், 217 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரியால், கடந்தாண்டு மார்ச்சில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும், மகாதேவி மங்கலம் கிராமத்தில், 1 ஏக்கர் 69 சென்ட் நில உரிமையாளரான சிவலிங்கம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மனுவில், 'மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி பிறப்பித்த, நிலம் கையகப்படுத்தும் நோட்டீஸ், தமிழ்நாடு தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தல் சட்டத்துக்கு விரோதமானது. ஆட்சேபங்களை பரிசீலிக்கவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்., 7க்கு தள்ளிவைத்தார்.

Advertisement