ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு

சென்னை: சமூக வலைதளத்தில் தன் மீது அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கோவில் ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்து உள்ளார்.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். கோவில்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்ந்து நடத்தி வருகிறார். கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்.
இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர், சென்னை ஐகோர்ட்டில் , ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: துஷ்யந்த் ஸ்ரீதர் ரசாயன பாடத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். ராஜஸ்தானில் உள்ள பிர்லா தொழில்நுட்ப மையத்தில் பட்டமேற்படிப்பு முடித்து உள்ளார். பிறகு ஆன்மிக பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தனது மனுதாரர், புகழ்பெற்ற மற்றும் அனைவராலும் மதிக்கப்படும் வேத அறிஞர். சனாதன கொள்கைகள் குறித்து சொற்பொழிவாற்றி வருகிறார். ஹிந்தி, தமிழ் மொழிகளில் சரளமாக பேசும் திறன் கொண்ட அவர், ராமாயணம், மஹாபாரதம், பாகவத மகாபுராணம்,விஷ்ணுபுராணம், திவ்யபிரபந்தம் ஆகியவற்றை பற்றி சொற்பொழிவு ஆற்றி உள்ளார்.
உலகம் முழுதும் 3,500 நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். ஆனால், சில காரணங்களுக்காக 2023 முதல், துஷ்யந்த் ஸ்ரீதர் மீது ரங்கராஜன் நரசிம்மன் தனிப்பட்ட முறையில் சமூக வலைதளம் மூலம் விமர்சனம் செய்து வருகிறார். அது, அனைத்தும் தவறானவை. அநாகரீகமானதுடன், நேர்மையான விமர்சனத்திற்கான எல்லையை தாண்டி விட்டது. அனைத்து கருத்துகளையும் நீக்குவதுடன், எதிர்காலத்தில் அவ்வாறு விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டும். அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
மனுதாரர் உலகம் முழுவதும் பயணித்து சொற்பொழிவுகளை நடத்தினாலும் துஷ்யந்த் ஸ்ரீதர் சென்னையை மையப்படுத்தி பணியாற்றி வருகிறார். அங்கு அவரது சொற்பொழிவுகளை ஏராளமானோர் கேட்கின்றனர். அவர் ஆங்கிலத்தை தவிர, தாய்மொழியான தமிழிலும் சொற்பொழிவுகளை வழங்குகிறார்.
எனது மனுதாரர், ரங்கராஜன் நரசிம்மனின், வரம்புகளை மீறிய விமர்சனத்தால் வேதனையடைந்துள்ளார். ரங்கராஜன் நரசிம்மன், அவதூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறார். இதனை தொடர்ந்து செய்வதாக தெரிகிறது எனவும் கூறினார்.
ரங்கராஜன் நரசிம்மன் ஸ்ரீரங்கத்தில் வசிப்பதால், இந்த வழக்கை திருச்சியில் தாக்கல் செய்ய வேண்டும் என அவர் சார்பில் வாதாடப்பட்டது.
இதற்கு துஷ்யந்த் ஸ்ரீதர் சார்பில், ' தான் பெங்களூருவில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். எனது சொற்பொழிவுகளை கேட்பவர்கள் பெரும்பாலானவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தொடர விரும்புகிறேன்,' என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி குமரேஷ் பாபு, இந்த மனு குறித்து ஏப்.,29ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ரங்கராஜன் நரசிம்மனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.









