மேலிட தலைவர்களை சந்திக்க முடியாமல் தவிக்கும் ராஜண்ணா

'ஹனி டிராப்' விவகாரம் பற்றி புகார் அளிக்க டில்லி சென்றும், மேலிட தலைவர்களை சந்திக்க முடியாமல் அமைச்சர் ராஜண்ணா தவித்துவருகிறார்.

கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா. இவரை ஹனி டிராப் செய்ய முயன்றது பற்றி, சி.ஐ.டி., விசாரிக்கிறது. சட்டசபையில் வைத்து ஹனி டிராப் ரகசியத்தை உடைத்ததால் அவர் மீது காங்கிரஸ் மேலிடம் கோபமாக உள்ளது.

இதனால் மேலிட தலைவர்களை சந்தித்து விளக்கம் அளிக்க, ராஜண்ணா டில்லி சென்று உள்ளார். ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, வேணுகோபால் உள்ளிட்டோரை சந்தித்து பேச முயற்சி செய்தார். ஆனால் நேற்று மாலை வரை யாரையும் சந்திக்க முடியவில்லை.

இதற்கிடையில், ராஜண்ணா மகன் எம்.எல்.சி., ராஜேந்திரா மைசூரில் நேற்று அளித்த பேட்டி:

டில்லியில் இருந்து திரும்பியதும், ஹனி டிராப் வழக்கில் சி.ஐ.டி., முன்பு ராஜண்ணாவிசாரணைக்கு ஆஜராகலாம்.

வாய்ப்பு கிடைத்தால் காங்கிரஸ் தலைவர் ஆவேன் என்று ராஜண்ணா கூறி உள்ளார். அவர் உண்மையானகாங்கிரஸ்காரர்.

கட்சியை ஒழுங்கமைப்பவர். அதனால் தலைவர் பதவி கேட்டு உள்ளார். இதில் எந்த தவறும் இல்லை.

விவசாயிகளுக்கு மானியம் வழங்க தான், பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இதில்அரசுக்கு ஒரு ரூபாய்கூட கிடைக்காது.

எதிர்க்கட்சியினர் பெட்ரோல், டீசல், தங்கம், சுங்கச்சாவடி கட்டண உயர்வு பற்றி பேசியது இல்லை. சித்தராமையா சிறப்பான முதல்வராக இருப்பதால், எதிர்க்கட்சியால் தாங்க முடியவில்லை.

இவ்வாறு அவர்கூறினார்.

இதற்கிடையில் பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி அளித்த பேட்டியில், ''மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கான பட்டியலில் எனது பெயர், அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே பெயர் உள்ளது. அவருக்கு தலைவர் பதவி கிடைத்தாலும், நான் ஆதரவாக இருப்பேன்,'' என்றார்.

ஈஸ்வர் கன்ட்ரே கூறுகையில், ''மாநில தலைவர் பதவி குறித்து, கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். நான் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டவன் இல்லை,'' என்றார்.




- நமது நிருபர் -

Advertisement