உபரிநீர் செல்லும் கால்வாய்கள் துார் வாரி சீரமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு:குண்டூர் ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும் கால்வாயை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு குண்டூர் ஏரி, நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த ஏரியில், மழைக்காலங்களில், தண்ணீர் முழு கொள்ளளவு நிரம்பி வழிகிறது.

ஏரியிலிருந்து உபரி நீர், ராகவனார் தெரு, வரதராஜன் தெரு கால்வாய் வழியாக ஜி.எஸ்.டி., சாலையைக் கடந்து, கொளவாய் ஏரிக்குச் செல்கிறது.

இந்த கால்வாய்கள் பல ஆண்டுகளாக முழுமையாக துார் வரப்படாமல் உள்ளன.

இங்கு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுகிறது. மழைக்காலங்களில், நகரவாசிகள் பாதிக்காமல் இருக்க, நகராட்சி நிர்வாகத்தினர் அடிக்கடி கால்வாயை துார் வாரி, அந்த கழிவு மண்ணை கால்வாய் கரை மீது கொட்டி விடுகின்றனர்.

மீண்டும் மழை பெய்யும் போது, கழிவு மண் கால்வாயில் சேர்ந்து, கால்வாய் துார்ந்து விடுகிறது.

தற்போது, கால்வாயில் கழிவுநீர் செல்வதால், கொசு உற்பத்தி இடமாக மாறி வருகிறது.

இதனால், நகரவாசிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, நகரவாசிகள் நலன் கருதி, கால்வாயை நீர்வளத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து, முழுமையாக துார் வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement