பிரிட்ஜில் அசைவம்; 2 ஓட்டலுக்கு அபராதம்


பிரிட்ஜில் அசைவம்; 2 ஓட்டலுக்கு அபராதம்


ஈரோடு:ஈரோடு மாநகர பகுதியில் அசைவ உணவகங்களில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார், சதீஷ்குமார் நேற்று சோதனை நடத்தினர்.
இதில் இரு கடைகளில் இறைச்சி உணவை தயார் செய்து, குளிர்பதன பெட்டியில் இருப்பு வைத்திருந்தனர். 18 கிலோ எடையிலான இறைச்சி வகைகளை கைப்பற்றி அழித்தனர். விளக்கம் கேட்டு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். அக்கடைகளில் சுகாதாரமில்லாத வகையில் உணவு கூடம் இருந்ததால், தலா, 3,000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.
இதுபற்றி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் கூறியதாவது: ஆய்வில் சில உணவகங்கள் சுகாதாரமின்றி நடத்துவது தெரிந்தது.
பழைய இறைச்சிகளை குளிர்பதன பெட்டியில் சேமித்து வைத்தும், செயற்கை வண்ணங்கள், அஜினோமோட்டா போன்ற செயற்கை சுவையூட்டி சேர்த்தும், தரமற்ற மூலப்பொருட்களால் உணவு தயாரிப்பதும் தெரியவந்தது. அக்கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி உள்ளோம். இதுபோன்ற புகார்களை, 94440 42322 என்ற எண்ணிலும், உணவு பாதுகாப்பு துறை நுகர்வோர் செயலியிலும் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறினர்.

Advertisement