வடிந்து செல்லாத மழை நீர்; பொதுமக்கள் தவிப்பு

அன்னுார்; இரண்டு நாட்களாகியும் மழை நீர் வடிந்து செல்லாததால் பழனி கிருஷ்ணா அவென்யூ மக்கள் தவிக்கின்றனர்.

அன்னுார் பேரூராட்சியில், சத்தி ரோட்டில், பழனி கிருஷ்ணா அவென்யூ உள்ளது. இப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு துவங்கி சனிக்கிழமை அதிகாலை வரை அன்னுார் பகுதியில் கனமழை பெய்தது. இதை அடுத்து பழனி கிருஷ்ணா அவென்யூவில் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

பொதுமக்கள் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இரண்டாவது நாளாக நேற்றும் மழை நீர் வடிந்து செல்லாமல் வீடுகளின் தரைத்தளம் வரை தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதே போல் தர்மர் கோவில் வீதி, புவனேஸ்வரி நகர் பகுதியில் மழை நீர் அதிக அளவில் தேங்கி நிற்பதால் வீடுகளின் கட்டுமானத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. தோட்டங்களிலும் பயிர்கள் அழுகுகின்றன.

இப்பகுதி மக்கள் கூறுகையில், 'மழை நீர் வடிந்து செல்ல வடிகால் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். மின்மோட்டார் மூலம் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என்றனர்.

Advertisement