'ஆரூரா... தியாகேசா' கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் ஆழித் தேரோட்டம், 'ஆருரா ... தியாகேசா' கோஷங்கள் முழங்க கோலாகலமாக நடந்தது.


திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந்தது. ' இக்கோவில் தோன்றிய காலத்தை கூறமுடியாத அளவு பெருமை பெற்றது' என, திருநாவுக்கரசர் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித்தேர். இத்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரியது. தேரின் உயரம் 96 அடி; எடை 350 டன். முன்புறம் தேரை இழுப்பதுபோல் நான்கு குதிரை சிலைகள் உள்ளன.


ஒவ்வொரு குதிரையும்,26 அடி நீளம், 11 அடி உயரம் உடையவை. இவை, தமிழர்களின் கலைநயத்தை பறைசாற்றும் விதமாகவும், நான்கு வேதங்களை குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன. தேரை இழுக்கும் வடத்தின் நீளம், 425 அடி, சுற்றளவு, 21 அங்குலம் ஆகும். திருச்சி பெல் நிறுவனம், ஆழித்தேரை நவீனமாக்கி, ஹைட்ராலிக் பிரேக் அமைத்துள்ளது.



கடந்த மாதம், 13ம் தேதி பங்குனி உத்திரவிழா துவங்கியதையடுத்து, 15ம் தேதி, கொடியேற்று விழா நடந்தது. ஆழித்தேரோட்டத்தை ஒட்டி, நேற்று இரவு, 10:45 மணிக்கு, ஆழித்தேருக்கு தியாகராஜசுவாமி எழுந்தருளினார்.சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.


இன்று (ஏப்ரல் 07) அதிகாலை, 5:30 மணிக்கு,விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. காலை 9:10 மணிக்கு, ஆயில்ய நட்சத்திரத்தில், கலெக்டர் மோகனச்சந்திரன், எஸ்.பி.,கருண்கரட், எம்.எல்.ஏ., கலைவாணன், பா.ஜ., மூத்ததலைவர் எச்.ராஜா ஆகியோர் வடம் பிடித்து,ஆழித்தேரோட்டத்தை துவக்கிவைத்தனர்.


ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'ஆரூரா... தியாகேசா' கோஷங்கள் முழங்க வடம்பிடித்து தேரை இழுத்தனர். ஆடி அசைந்து புறப்பட்ட ஆழித்தேர், பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்குபின், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டன. கீழ ரதவீதியில் கிளம்பிய ஆழித்தேர் இன்று இரவு நிலையை அடையும்.

Advertisement