மோடி சொன்னால் கிணற்றிலும் குதிப்பதாக அண்ணாமலை பேட்டி

1

சென்னை : ''கிணற்றில் குதி என்று பிரதமர் மோடி சொன்னாலும், கண்ணை மூடிக்கொண்டு செய்வேன்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:



பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இருக்க வேண்டும். அதில், அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. முதல்வர் பங்கேற்காதது எங்களுக்கு வருத்தம். அடுத்த முறை, தவறை முதல்வர் திருத்திக் கொள்வார் என, எதிர்பார்க்கிறோம்.

முதல்வர் ஊட்டிக்கு சென்றதால், இலங்கையில் பிரதமர் மோடி பேசியது தெரியவில்லை. பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.

இலங்கையில் என்ன பேசப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இவற்றை மறைத்துவிட்டு, சட்டசபையை தவறாக பயன்படுத்தி உள்ளனர். கச்சத்தீவை மீட்க, யாரும் பாடம் எடுக்க வேண்டாம். கட்சித் தலைவர் பதவி இல்லை என்றால், நான் இன்னும் களத்தில் இருந்து போராடுவேன். மாநிலத் தலைவர் பதவி இருக்காது என்பதால், தொண்டனோடு தொண்டனாக இருந்து போராட்டத்தை நடத்துவேன்.

பதவிகள் வரும், போகும். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சுறுசுறுப்பாக களத்தில் போராட வேண்டும். தி.மு.க.,வின் ஊழலை, தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுவேன். இதில் எந்த தொய்வும் கிடையாது.

மோடிக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். அவர் கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் குதிப்பேன். ஒரு கட்சியை பார்த்தோ, அதன் சித்தாந்தத்தை பார்த்தோ அரசியலுக்கு வரவில்லை.

மோடி சொன்னால், அதை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துவேன். அவரது கட்டுப்பாடுகளை முழுமையாக ஏற்று செயல்படுவேன்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement