கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி

2

ஒட்டாவா: கனடா பார்லி. தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் வேட்பாளர்களாக களத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளனர்.



கனடாவில் 2025ம் ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பிரதமராக பதவியில் இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆளும் லிபரல் கட்சியில் கடும் எதிர்ப்பு எழவே, அரசியல் காட்சிகள் மாறின.


பதவியை ட்ரூடோ ராஜினாமா செய்துவிட பெரும்பான்மை ஆதரவுடன் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமராக மார்க் கார்னி தேர்வானார். அதன் பின்னர் பார்லி.யை கலைத்த அவர், ஏப்.28ல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார்.


பார்லி. தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்க, மறுபக்கம் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களும் வெளியாகி வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக வழக்கத்தை விட இந்த முறை கனடா தேர்தலில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர்.


பல ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளின் அரசியல் களத்தில் பஞ்சாப்-கனடா அரசியல்வாதிகள் அறிமுக முகங்களாக இருந்த நிலையில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த குஜராத்தியர்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தும் இத்தகைய நிகழ்வு ஒரு புதிய அம்சமாக பார்க்கப்படுகிறது.


பிராம்ப்டன் தொகுதி முதல் கால்கரி வரை, 4 குஜராத் வம்சாவளி வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இவர்கள் முதல் தலைமுறை குடியேறியவர்கள், முதல்முறையாக பார்லி. தேர்தல் களத்தில் நுழைகின்றனர்.


இந்த 4 பேரில் ஒருவரான ஜெயேஷ் பிரம்பட் என்பவர் சிவில் என்ஜினியராக இருந்து பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக மாறியவர். 2001ம் ஆண்டு குஜராத்தில் இருந்து கனடா வந்தவர். மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளராகி உள்ளார். இவர் தற்போது கனடாவில் சிங்கவுசி பார்க் பகுதியில் வசித்து வருகிறார்.


இதுகுறித்து பேசிய அவர், 2 தசாப்தங்களுக்கும் மேலாக எங்களின் தாயகமாக இருப்பது கனடா. களத்தில் பலரையும் சந்திக்கிறேன். அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இப்போது கட்சிகள் இந்தியர்களை அரசியலில் ஒரு முக்கிய சமூக அடையாளமாக பார்க்கின்றன என்று கூறி உள்ளார்.


மற்றொருவரான சஞ்சிவ் ராவல் கால்கரி மிட்னாபூரில் இருந்து லிபரல் கட்சி சார்பில் வேட்பாளராகி இருக்கிறார். தான்சானியாவில் பிறந்தவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கால்கரியில் வசித்து வருகிறார்.


இவர்களை தவிர அசோக் படேல், மினேஷ் படேல் ஆகியோர் ஷெர்வுட், கால்கரி ஸ்கைவியூ தொகுதியில் இருந்து சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு எந்த அரசியல் பின்புலமும் இதற்கு முன்பு இருந்தது இல்லை.


கனடா அரசியலில் நிகழும் இந்த மாற்றம் குறித்து ஒட்டாவாவை தளமாக கொண்ட வெளிநாட்டு இந்திய நண்பர்கள் கனடாவின் சர்வதேச வர்த்தக இயக்குநர் ஹேமந்த் ஷா கூறியதாவது;


கனடாவானது 1 லட்சத்துக்கும் அதிகமான குஜராத்தியர்களின் தாயகமாக உள்ளது. டொராண்டோ, மாண்ட்ரீல், ஒட்டாவா, கால்கரி, வான்கூவர் பகுதிகளில் அதிகமாக வசிக்கின்றனர். பலர் இங்கு குடியேறிகளாக வந்தவர்கள். நான் பல தசாப்தங்களாக இங்கே இருக்கிறேன்.


இந்த தேர்தலில் குஜராத்தி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் களத்தில் இருப்பதை பார்க்கிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement