குன்னுார் வெலிங்டன் வந்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

குன்னுார் : குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வந்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், முப்படை இளம் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு பெறுகிறது. இதையொட்டி, ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு நேற்று இரவு, 7:30 மணிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வந்தார்.

அவருடன், முப்படைகளின், 2வது தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் வருகை தந்தார்.

இருவருக்கும், கல்லுாரி பைன் விருந்தினர் மாளிகையில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

இன்று காலை, போர் நினைவு சதுக்கத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை பயிற்சி இளம் அதிகாரிகள் மத்தியில், நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.

முன்னதாக, நேற்று காலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தன. ராணுவ பயிற்சி கல்லுாரி பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Advertisement