உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான ராணுவ உதவி வழங்கிய ஐரோப்பிய நாடுகள்

4

லண்டன்: உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை அந்நாட்டுக்கான சர்வதேச நிதியத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளன.


உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைனில் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றி ரஷ்யா தங்கள் வசம் வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை பிரிட்டன் தலைமையிலான உக்ரைனுக்கான சர்வதேச நிதியம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறையின் செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார். உக்ரைனின் ராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம், ரஷ்யாவின் தாக்குதலை ஒடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

ஆயிரக்கணக்கான டிரோன்கள் வாங்கவும், டாங்கி எதிர்ப்பு சுரங்கங்கள், ராணுவ வாகனங்களை பழுது பார்க்கவும் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் வழங்கப்படும் ரூ.5,000 கோடியில் ரூ.3,500 கோடியை பிரிட்டன் வழங்கியுள்ளது. எஞ்சிய தொகையை உக்ரைனுக்கான சர்வதேச நிதியத்தின் மூலம் நார்வே கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement