காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் ஏப்.21ல் சஹஸ்ர தீப அலங்கார காட்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், வரும் 21ம் தேதி மாலை, சஹஸ்ர தீப அலங்கார காட்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர் கூறியதாவது:

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், மஹாசக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது. காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளானையின்படி, அஷ்டமி தோறும் 1,000 விளக்குகளால் கோவில் வசந்த மண்டபத்தை அலங்கரிக்கும், அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகளுடன் சஹஸ்ர தீப அலங்கார சேவைக் காட்சி நடைபெற்று வருகிறது.

வரும், ஏப்.21ம் தேதி அஷ்டமியையொட்டி அன்று, மாலை லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உத்சவர் காமாட்சியம்மன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, 1,000 விளக்குகள் ஏற்றப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையொட்டி உத்சவர் காமாட்சியம்மனுக்கு சிறப்பு மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டையொட்டி, நாளை, இரவு 7:00 மணிக்கு, காஞ்சி காமாட்சியம்மன் தங்க தேரில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளிலும் பவனி வர உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement