அய்யங்கார்குளம் கிராமத்தில் இன்று நடவாவி உத்சவம்

காஞ்சிபுரம்:ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நடவாவி உத்சவம், அய்யங்கார்குளம் கிராமத்தில் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவம் இன்று நடக்கிறது.

உத்சவத்தையொட்டி உபயநாச்சியாருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நேற்று இரவு, மேனா பெட்டியில் எழுந்தருளி அய்யங்கார்குளம் கிராமத்திற்கு புறப்பட்டார்.

இன்று, காலை 6:00 மணிக்கு புஞ்சையரசந்தாங்கலில் மண்டகப்படி நடக்கிறது.

துாசி வைகுண்டநாதர் கோவிலில் 12:00 மணியளவில் சுவாமிக்கு மரியாதை நிகழ்ந்ததும், அங்கிருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பாடாகி, மாலை 4:00 மணியளவில் அய்யங்கார்குளம் கிராமத்தில் வீதியுலா சென்று, இரவு 7:00 மணியளவில், சஞ்சீவிராயர் கோவிலில் எழுந்தருளும் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது.

இரவு 9:00 மணியளவில் சஞ்சீவிராயர் கோவிலில் இருந்து, நடவாவி கிணற்றுக்கு செல்கிறார். கிணற்றில், பத்தி உலாத்தல், பூஜைகள் நடைபெற்றபின், கிணற்றில் இருந்து எழுந்தருளி புஞ்சையரசந்தாங்கல் வழியாக பாலாற்று பந்தலில், இரவு 10:00 மணிக்கு எழுந்தருள்கிறார்.

அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், பிரம்மாராதமன், நிவேதனம், பூஜைகளுக்குப் பின், பாலாற்றில் குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.

Advertisement