முதல்வர் நலத்திட்ட நிகழ்ச்சிக்காக மேடை அமைக்கும் பணி தீவிரம்

பொன்னேரி:பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, வரும் 18ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பொன்னேரி வருகிறார். பொன்னேரி அடுத்த பெருஞ்சேரி கிராமத்தில், இதற்காக பிரமாண்ட மேடை மற்றும் கூரை அமைக்கும் பணி நடக்கிறது.

இங்கு, 20,000க்கும் மேற்பட்டோர் அமர்வதற்கான இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேடை மற்றும் கூரை அமைக்கு பணிகளில், வடமாநில தொழிலாளர்கள் இரவு, பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.

பொன்னேரி நகராட்சி, சோழவரம் ஒன்றிய நிர்வாகம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு, பணியாற்றி வருகின்றனர்.

தற்காலிக கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். ஆவடி கமிஷனரகம் சார்பில், அங்கு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் ஆண்டார்குப்பம், முஸ்லிம் நகர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில், 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, அங்குள்ள விவசாய நிலங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது, மக்களை எந்த வழியாக கூட்ட அரங்கிற்கு அனுமதிப்பது, விழா முடிந்த பின் வாகனங்கள் நெரிசலின்றி செல்வதற்கான வழிவகை செய்வது குறித்தும், காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement