நேரு தம்பி மீதான சி.பி.ஐ., வழக்கில் இடையீட்டு மனு தாக்கலுக்கு அனுமதி

சென்னை:சி.பி.ஐ., பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு தொடர்பாக, அமலாக்கத்துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு. இவரின் சகோதரர் என்.ரவிச்சந்திரன். இவர் இயக்குனராக உள்ள, 'ட்ரூடோம் இ.பி.சி., இந்தியா' நிறுவனம், 2013ல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம், 30 கோடி ரூபாய் கடன் பெற்றது.

இந்த தொகையை தன் துணை நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதன் வாயிலாக, தங்களுக்கு, 22 கோடி, 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது, 2021ம் ஆண்டு சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

இதை அடிப்படையாக கொண்டு, அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் மகன் வீடு, அலுவலகம் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில், சமீபத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கு விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்தாண்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள், நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் என்.ரமேஷ் ஆஜராகி, ''சி.பி.ஐ., வழக்கை அடிப்படையாக கொண்டே, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, சி.பி.ஐ., வழக்கை ரத்து செய்ய கோரும் வழக்கில், அமலாக்கத்துறையை இணைக்க அனுமதி வழங்க வேண்டும்,'' என்றார்.

இதற்கு மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், 'அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை ஆபத்தானது; சட்டத்தை மீறியது; தங்களின் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்த, இதுபோல செயல்படுகிறது' என்றனர்.

இதை மறுத்த சிறப்பு பிளீடர் என்.ரமேஷ், ''கவலை காரணமாகவே, இதுபோல குற்றம் சாட்டப்படுகிறது. சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய, அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Advertisement