தாயின் பூர்வீக கிராமத்து கோவில் சீரமைத்த நடிகர் பிரபுதேவா

மைசூரு: பன்மொழி நடிகர் பிரபுதேவா, தன் தாயின் ஆசையை நிறைவேற்றும் நோக்கில், சொந்த ஊரில் மலை மஹாதேஸ்வரா கோவிலை சீரமைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
பிரபல நடிகர் பிரபுதேவாவின் பூர்வீகம், மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின், தொரா கிராமமாகும்.

இவரது தாய் மஹாதேவம்மா, கெம்பாளு கிராமத்தில் நிலம் வாங்கிஇருந்தார்.

இதன் அருகில் மலை மஹாதேஸ்வரா கோவில் உள்ளது. புராதனமிக்க இக்கோவில் சோழ வம்சத்தினர் கட்டியதாகும்.

இத்தகைய கோவில் சிதிலமடைந்திருந்தது. இதே நிலையில் கிராமத்தினர் பூஜித்து வந்தனர்.

இக்கோவிலை சீரமைக்க வேண்டும் என, மஹாதேவம்மா மிகவும் ஆசைப்பட்டார்.

தன் தாயின் ஆசையை நிறைவேற்ற முன் வந்த பிரபுதேவா, 25 லட்சம் ரூபாய் செலவில் கோவிலை சீரமைத்தார். சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களாக கோவிலிலேயே தங்கியுள்ள பிரபுதேவா, தன் மனைவி ஹிமானியுடன் பூஜைகளில் பங்கேற்கிறார். கலச பூஜை, நவகிரஹ ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நடக்கின்றன.

நேற்றும் பூஜைகள் நடந்தன. கோவில் திருப்பணியை முன்னிட்டு, கிராமத்தினருக்கு அன்னதானமும் வழங்கினார்.

Advertisement