வடபழனியில் 'கேண்டீன்' இடிப்பு எம்.எல்.ஏ., ஆட்கள் அடாவடியா?

1

விருகம்பாக்கம், வடபழனியில் குத்தகை இடத்தில் செயல்பட்டு வந்த கேண்டீனை, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் இடித்து தள்ளியதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,

வடபழனி குமரன் காலனி, வி.பி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் பால்துரை, 73. இவர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகார்:

வடபழனி குமரன் காலனி, நான்காவது தெருவில் உள்ள, ஜனார்த்தனம் என்பவருக்கு சொந்தமான, 1,800 சதுர அடி நிலத்தை, 2003 ம் ஆண்டு முதல், குத்தகைக்கு எடுத்து, 'கேண்டீன்' நடத்தி வருகிறேன். இந்நிலையில், 'குத்தகை இடம் எங்களுக்கு சொந்தமானது. இடத்தை காலி செய்' என, விருகம்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகர்ராஜாவின் ஆட்கள் என கூறி வரும் சூர்யசிவகுமார், சீனிவாசன் ஆகியோர், இரண்டு ஆண்டுகளாக மிரட்டல் விடுத்து வந்தனர்.

இதுகுறித்து, காவல் நிலையத்திலும், முதல்வர் தனிப்பிரிவிலும் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம், விரும்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகர் ராஜாவின் ஆட்கள் என கூறி வந்த சூர்யசிவகுமார், சீனிவாசன் மற்றும் 30 க்கும் மேற்பட்டோர், திடீரென ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, எங்கள் இடத்தின் சுற்றுசுவரை இடித்து, பொருட்களை நொறுக்கினர்.

இதுகுறித்து கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

பால்துரையின் மகன், 'நாங்களும் தி.மு.க.,வினர்தான்; எங்களுக்கே இந்த நிலை. 'நாங்கள் ஆளும் கட்சி; நீங்கள் யாரிடம் கூறினாலும் ஒன்றும் நடக்காது' என, சவால் விட்டு சென்றுள்ளனர். முதல்வரே நீங்கள் பாருங்கள்' என, வீடியோ ஒன்றை, சமூகவலை தளத்தில் வெளியிட்டார்.

எம்.எல்.ஏ., புகார்

விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகராஜா தரப்பில் இருந்து, 'இந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தன் மீது அவதுாறு பரப்பப்படுகிறது' என, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் குறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement