சாரல் மழையால் அச்சம் அடைந்த விவசாயிகள்

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏரி, கிணறு மற்றும் ஆற்று பாசனம் வாயிலாக, நவரை பட்டத்திற்கு பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

அதில் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்களை, சில நாட்களாக தொடர்ந்து அறுவடை செய்து வருகின்றனர். அறுவடையான நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து விற்பனைக்காக காத்துள்ளனர்.

இந்நிலையில், வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று, வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பிட்ட சில பகுதிகளில் திடீரென காற்றுடன் சாரல் மழை பெய்தது.

இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல் குவித்து வைத்திருந்த விவசாயிகள் பதற்றம் அடைந்தனர்.

தங்களது நெல், மழையில் நனையாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக தார்ப்பாய் போர்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

பின், அதிக மழைப்பொழிவு இல்லாமல் லேசான துாரலோடு மேகம் கலைந்ததால் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.

Advertisement