கனரக வாகனங்களால் பழுதாகும் மதுார் கூட்டுச்சாலை

மதுார்,:பழையசீவரம் பாலாற்று பாலம் துவங்கி, திருமுக்கூடல் வழியாக சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள மதுார் கூட்டுச்சாலை சுற்றுவட்டார கிராமங்களின் மையப் பகுதியாக இருந்து வருகிறது.

மதுார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், சிறுமையிலுார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

மதுார் சுற்றுவட்டார கிராமங்களில் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகிறன்றன. இந்த தொற்சாலைகளில் இருந்து, லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், மதுார் கூட்டுச்சாலை வழியாக இரவு, பகலாக இயக்கப்படுகின்றன.

இதனால், மதுார் கூட்டுச்சாலை பகுதி அடிக்கடி சேதம் அடைவதும், அவ்வப்போது பள்ளமான சாலையில் மண் மற்றும் ஜல்லி கற்கள் கொட்டி சமன் செய்வதும் வழக்கமாக உள்ளது. தற்காலிகமான பணி மேற்கொள்ளப்படும் அச்சாலை, மீண்டும் ஒரு சில நாட்களில் பழுதடைந்து வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

எனவே, மதுார் கூட்டுச்சாலை பகுதியில், கான்கிரிட் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement